Sunday, July 14, 2019

 😁 பற்குறள்: பல்லோம்பல் 😁













பல்செல்வம் ஈட்டிப் பயனென் பழுதில்லாப்
பல்செல்வம் பெறாஅர் எனின்? 1

பல்லார் பழிக்கப் பெறுவர்வாய் பேணாத
பல்லார்தாம் பல்நோய்வாய்ப் பட்டு. 2

கற்க கசடறப் பல்நலம் கற்றிடேல்
நிற்க மருத்துவர் முன்.   3

தொட்டால் துடிப்போம் பிறபுண்ணால் பல்லோநீர்
பட்டாலும் நோகும் பழுத்து.  4 

பல்லால் கிடைத்த பயனெல்லாம் சொத்தைவரில்
சொல்லாமல் ஏகும் துறந்து. 5

பல்காத்துப் பல்டாக்டர்” சொல்காத்துப் பின்வரும்
பில்பார்த்துப் போகும் வலி. 6

.மண்ணுலகும் தீநரகாய் மாறுமே பற்களிடைப்
புண்ணுழைந்த போதில் பொரிந்து. 7.

வலிசூழ்ந்த பல்லெனக் காட்டிநம் இன்பம்
பலிகொள்ளும் பாவி உணர்.  8

பல்லால் விளைஇன்னல் வாழ்வில் படும்துன்பம்
எல்லாவற் றுள்ளும் தலை. 9

யாகாவா ராயினும் வாய்காக்க காவாக்கால்
சோகாப்பர் பல்லழுக்குப் பட்டு. 10    
                          
... அனந்த்
 9-7-2019

Saturday, July 13, 2019

என் கதை (கானடா காவடிச் சிந்து)

                                                                                                  காவடிச் சிந்து என்பது சிந்துக் கவி வகையைச் சார்ந்தது. அதில் மிக அழகிய சந்தம் பயிலும்.  முதல் கண்ணியும், இஇறுதிக் கண்ணியும் ஒரு வகைச்சந்தத்தோடும் நடுக் கண்ணி மாறுபட்ட, முடிகிய/விரைந்த சந்தத்தோடும் இருப்பன.  நடு அடிகள் தாம் காவடிச் சிந்திற்கு ஊட்டமளிப்பன. அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துகள் புகழ்பெற்றவை. கவிமன்னன் பாரதி மிகச் சிறிய வயதிலே எட்டயபுர சமீந்தார் அவையில் அழகான காவடிச் சிந்து ஒன்றைப் பாடியுள்ளான்.



                                  என் கதை

              (அல்லது கானடா காவடிச் சிந்து)



                    கானடா என்றொரு தேசம்
                    அதில் வாசம்
                    தந்த நேசம் - நல்ல
                    காதலைப் போலொரு பாசம்- வந்த

                    விதமே யொரு கதையே யதன்
                    பதமே வெகு புதுமை சொலக்
               
                    காத்திருந் தேன்பல காலம் - இன்று
                    காட்டிடு வேனதன் கோலம்            (1)


                    நானிங்கு வந்திட்ட வேளை   
                    யிளங் காளை
                    நல்ல மூளை- மணம்
                    நான்முடித் தேன்அழ காளை- உளத்

                    தடியே வெகு துடியோ  டொரு
                    படியாகவே  குடியேறிட
   
                    நான்வந்து சேர்ந்தனிக் கண்டம்-அந்த
                    நாள்முதல் வாழ்வெம கண்டம்        (2)

                   
                    காலையும் மாலையும் வேலை
                    பணி ஆலை
                    ஒரு மூலை- அதைக்
                    கண்டுபி டிக்கவே சாலை- தனில்
           
                    கனவே கமாய்த் தினமே வளி
                    எனவே செல மனம்போ லொரு
   
                    காரெனும் ஊர்தியைக் கொண்டு-அதில்
                    கண்டதுன் பம்பல வுண்டு            (3)
                               

                    சூரிய னென்றொரு பேச்சு   
                    வெறும் ஏச்சு
                    எனப் போச்சு - உடல்
                    சூடுபோய் நாள்பல வாச்சு -பனி
   
                    தலைமீ  திலும்  நிலமீ  திலும்
                    அலையாய் விழக்  குலையா  ததைத்

                    தள்ளித்தள் ளியென்றன் தேகம்-மண்ணில்           
                    சாய்ந்திடு மேஅதி வேகம்                          (4)               

           
                    பேய்ப்பனிக் காலத்தைக் கொன்று
                    வாயில் மென்று
                    தின்ன நன்று  - வரும்
                    பேரிளம் வேனிலு மென்று - மனம்
               
                    ஜதியோ டொரு குதிபோட் டிட
                    அதிலே  ஒரு மிதியாய்ப் புதர்

                    போலவே ஓங்குபுல் வெட்டித்- தினம்
                    பேர்ந்திடு மேஎன்றன் நெட்டி             (5)
           

                   
                    ஓரிரண் டேதிங்கள் நின்ற
                    வெம்மை சென்ற
                    பின்னர் தென்றல் - இனி
                    உள்ளபடி வரு மென்ற-எந்தன்
                                               
                   எதிர்பார்ப் பினில் விதிகூட் டிடும்
                    சதியோ யென அதி வேகமாய்           
   
                    ஓடி யிலையுதிர் வேளை -வரும்
                    ஓவென்று நெஞ்சிடும் ஊளை            (6)


                    சூறாவ ளீயெனக் காற்று           
                    மரம் ஏற்று
                    விழும் தோற்று- அதன்
                    சூரத்திற் கில்லையோர் மாற்று - அது                   

                    சுழலும் விதம் அழகா யினும்
                    பழகா தவர் விழுவா ரதில்

                    சுற்றிச்சுற்றி வந்து பார்க்கும்-அது
                    சும்மாயி ருந்தாலும் தாக்கும்            (7)

               
                    நல்லதும் உண்டிங்கு கேளும்
                    பல நாளும்
                    களி மூளும் - அதை
                    நான்சொல வேகதை நீளும்-அணி

                    அணியாய்  மிகத் துணிவோ டிவர்
                    பணிசெய் திடத் துணியே என

                    நீண்டதோர் சாலையில் ஏகும்- விதம்
                    நித்திய மும்நடந் தாகும்            (8)

           
                    இந்தநன் நாட்டினில் பஞ்சம்
                    இல்லை; கொஞ்சம்
                    உண்டு வஞ்சம்- எனில்
                    இந்தியா போலில்லை லஞ்சம் - இங்(கு)
       
                    அதனால் ஒரு விதமா கவும்
                    நிதவாழ் முறை சிதை யாமலே

                    யாவரும் ஒற்றுமை பேணும்-வகை
                    எல்லாவி தத்திலும் காணும்            (9)


                    ஆனவ ரைக்கு(ம்)நன் றாகக்
                    கதை போக
                    நல மாக- இங்கு
                    ஆண்டுகள் முப்பதும் ஏக- உடல்
                   
                    உதிர்வே ளையை எதிர்பார்த் துளம்
                    அதிரா மலே சதிரா டிடும்

                    ஆனந்தத் தாண்டவன் தாளை- எண்ணிப்
                    போக்கிடுவேன் வரு நாளை            (10)

எங்கும் கணபதி


       எங்கும் கணபதி

நதியரு கேனும் நடுத்தெரு வேனும்
... அதிலொரு கணபதி உண்டு-அவன்
... அழகினை உணும்மன வண்டு              

அதிசய மான ஒலியுடன் ஆனைக்
... கதியுடன் கூடிய சந்தம் - பதம்
... குதிநடம் ஆடர விந்தம்

விதியுடன் விண்ணோர் வழிபடு மேலோன்
... சுதிபுகழ் அதிபல சூரன் - உமை
... மகிழ்வுடன்  அணைசுகு மாரன்


மதியுடன் கொன்றை யணிபர மேசன்
... மகனிவன் மாமதி யாளன்-நெடு
... மலையினும் வலிமிகு தோளன்

ததியுடன் வெண்ணை திருடிடும் மாயன்
...தனக்கிவ  னொருமரு கோனாம் - இவன்
... தனக்கிளை யவன்முரு கோனாம்


எதிர்வரு கின்ற துயர்பல கண்டு
... அதிர்வெதும் அடைந்திட லில்லை-அவன்
... துதிசொலின் விலகிடும் தொல்லை
         

எதிலுளம் சாரு மினியெனக் கேட்பின்
... அதுஅவன் எழிலுரு தானே- அதில்
... அமிழ்ந்தென திடர்களை வேனே


கொதிதரு வாழ்வில் குளிர்தரு போலக்
... கருணையி னுருஅவன் காணீர்-அவன்
... கழலடி சிரமதில் பூணீர்!       


குறிப்பு:
அதிசயமான ஒலி= ஓங்காரம்;
ஆனைக் கதி= யானையின் நடை;
விதி=நான்முகன்;
சுதி=மறை;
ததி=தயிர்