Monday, January 28, 2019

படம் - (கதைக் கவிதை)

 படம் - (கதைக் கவிதை)


.. அனந்த்


1896-ஆம் ஆண்டில் ஒரு இத்தாலியப் பத்திரிகை நடத்திய போட்டியில், பேர்பெற்ற எழுத்தாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 500 லீராக்கள் பரிசுபெற்ற கதையொன்றை ((Lock and Key Library- Classical Mystery and Detective Stories, Edited by Julian Hawthorne, Year 1909, New York). நான் படிக்க நேர்ந்தது.  உடனே அதைக் கவிதை வடிவில் மொழிபெயர்க்க முயன்றேன். அக்கவிதையைக் கீழே காணலாம். இது 2004-ல் ‘மரத்தடி’ இணையக்குழுவின் இரண்டாம் ஆண்டு நிறைவின் போது வெளியானது. 

[இலக்கணக் குறிப்பு: இந்தக் கவிதை 'குறள் வெண்செந்துறைஎன்னும் மரபுப்பாடல் வகையைச் சேர்ந்தது. இதுஇரண்டு-இரண்டு அடிகளுக்கிடையே எதுகையும்முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனையும் (பெரும்பாலும்) வருமாறு அமைக்கப்படும். தளையைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. என் கவிதையில் மூன்று அசைகள் உள்ள சீர்கள் மிகுந்து இருப்பதால்அது ஏந்திசை (சற்றுத் தூக்கலான ஓசை) கொண்டு ஒலிக்கும்.] 

                                 

தொலைவில் இடி,மின்னல் தோன்றிடினும் தான்பெரிதாய்
அலைகள் எழுப்பிமிக ஆர்ப்பரிக்கா(து) அமைதியுடன்
அப்போதைக்(கு) இருந்த ஆழ்கடலின் பின்னணியில்,
கப்பல்போல் நீண்ட கலமொன்றின் மேல்தளத்தில்
கைகள்மேல் கன்னத்தைக் கவித்துக் கவலையினால்
நைந்தருகே அமர்ந்திருந்த நடராசன் முகத்தைத்தன்
மையார்ந்த கண்கள் காதலால் மினுமினுக்கத்
தையலாள் மேனகை தான்நோக்கி, 'என்பேரில்
நீவைத்த அன்பு நிஜம்தானா?' எனக்கேட்டாள்.
தீமிதித் தாற்போலத் திகைத்தெழுந்த நடராசன்
'வேண்டுமென்றே என்னைஇந்தக் கேள்வியினால் வெட்டிஉயிர்
நோண்டி எடுத்தென்னை நோகடிக்க வேண்டாம்நீ!'

என்றவுடன் 'ஆமாம்,போ! இந்தவகைப் பேச்செல்லாம்
உன்றன் உடன்பிறப்பாய் ஓடிவரும் உன்துணைக்கு!
உண்மையிலே என்னிடம் காதல் உனக்கிருந்தால்
அண்மையிலே நம்கையில் அகப்பட்ட வாய்ப்பிதனை
நழுவத்தான் விடுவாயோநன்றாக நினைத்துப்பார்:
அழுகையே என்வாழ்வாய் அமைத்துவிட்ட என்விதியால்,
பிணத்திற்கு மாலையிட்ட பெண்கதையாய் என்பெற்றோர்
பணத்திற்கு வேண்டிஎன்னைப் பாய்தேடும் கிழவனுக்குப்
பலிகொடுத்த பின்வாழ்வு பாலைவன மானபின்னே
குலுங்கி அழுதவண்ணம் குற்றுயிராய்ப் போனவளுக்(கு)
ஆண்டவன் கொடுத்த அருட்பிச்சை எனவந்து
மீண்டும்என் வாழ்வில் விளக்கொளியை நீதந்தாய்!

செத்தபின் உயிர்த்தெழும் 'பீனிக்ஸாய்'ச் சிலிர்ப்புடன்உன்
முத்தத்தில் நானெழுந்தேன்மோகத்தின் எல்லையிலே
அர்த்தமொன்றைக் காட்டினாய் அலுத்தஎன் வாழ்வுக்கு;
இத்தனையும் ஆனபின்னே இதயங்கள் கலந்தபின்னே
நன்றாகச் சிந்தித்து நாமெடுத்த முடிவாக
இன்றிந்தக் காரிருளில் இவ்வூரை விட்டோடிச்
சென்றெங்கோ கண்காணாச் சீமையிலே தேவரைப்போல்
இன்பமாய் எந்நாளும் இருப்பதென்று திட்டமிட்டோம்;
இணையத்தில் தன்எழுத்தை இடப்போகும் வேளையிலே
கணினியே உடைந்ததென்ற கதைபோல ஆயிற்றே!
கடைசி நிமிடத்தில் கலக்கமுற்று ஆண்பிள்ளைபோல்
உடையிலே மட்டுமே உருக்கொண்ட கோழையென
முனமேநான் அறியாத முட்டாளாய் ஆனானே!..."

எனமேலும் சொல்வதற்கு இருந்தவளின் வாய்பொத்தித்
தன்பால் இழுத்தவளைத் தன்னுடன் சேர்த்தணைத்தான்
அன்பின் நெகிழ்ச்சியிலே ஆணழகன் நடராசன்.
"என்அன்பின் ஆழத்தை இளக்காரம் செய்யாதே!
இன்றென் மனநிலையை என்னவளே! நீஅறியாய்;
என்னதான் ஆனாலும் இன்னொருவன் மனைவியொடு
சென்றோடிப் போனவனைச் செகத்துள்ளோர் இகழ்ந்திடுவார்
இன்னும் சிலநாள் எனக்காகப் பொறுத்திடுவாய்
உன்றன் மனம்போல ஓடிடுவோம்" எனக்கூற

இடிமின்னல் துணையோடு இறங்கியது பேய்மழையும்;
துடியோடு ஆயிரமாய்த் *துரகக் கூட்டங்கள்
ஒன்றன்மேல் ஒன்(று)உரசி ஓடிச்செல் வதுபோலக்
குன்றனைய பேரலைகள் குதிபோடப் பெருங்கடலும்
தன்வகையில் குறைவின்றித் தானும்அந்தக் கொந்தளிப்பில்
சேர்ந்திடஅவ் விரவும்ஓர் சீரழிந்த சித்திரமாய்ப்
பார்ப்போர் உளத்திலொரு பயப்புயலைத் தூண்டியது.

காதலிமேல் தான்கொண்ட கட்டில்லா அன்பைஅவள்
சோதிக்கும் நினைப்பளித்த சோகத்தில் உளம்காய்ந்து
தன்தொழிலாம் ஓவியத்தில் சாதனைகள் செய்துபிறர்
நன்மதிப்பைப் பெற்றிருந்தும் நாட்டமதில் இல்லாமல்,
அல்லும் பகலுமாய் அன்னஆ காரமின்றிச்
சொல்லொணாச் சோகவெறி துரத்திடநம் நடராசன்,
மேனகையின் கைப்பிடிக்க வேண்டுமென்றால் அவள்கணவன்
போனபின்பே இயலுமென்ற புழுக்கத்தில் வாடிநின்றான்.
(*துரகம்=குதிரை)

ஒருவாரம் சென்றபின்னர் ஒருநாள்தன் படுக்கைவிட்டுக்
கருக்கலிலே எழுந்தஅவன் கையிரண்டும் தானாக
நடுங்குவதும் மேனியெல்லாம் நன்றாக வியர்த்துத்தன்
உடுப்பெல்லாம் நனைந்ததையும் உணர்ந்ததனால் வாய்விட்டு,
'ஐயோ!நான் என்னதொரு அக்கிரமம் செய்துவிட்டேன்!
மையிருள் வேளையிலே மேனகையின் துணைவனைஎன்
கையாலே கொன்றுவிட்டுக் களைப்போடு திரும்பியது
பொய்யான கனவென்று புகலாரோ யாருமிங்கு?
மெய்யாக என்வாழ்வில் மிகச்சிறிய ஜீவனுக்கும்
செய்யேனே நான்கொடுமை! திட்டமிட்டு நேற்றிரவு
அரண்மனைபோல் காட்சிதரும் அவ்வீட்டின் உட்புகுந்து
இரண்டாம் மாடியிலே என்னினிய காதலியின்
கிழக்கணவன் தனைமறந்து கட்டிலிலே கிடக்கையிலே
பழக்கமே இல்லாத பணியைநான் செய்துவிட்டேன்!

சற்றுத் திறந்திருந்த தாழில்லாக் கதவுவழி
உற்றுப் பார்த்தபின்பு ஊணுண்ட குழந்தையைப்போல்
துயிலில் சொகுசாகத் தோய்ந்திருந்த மனிதனைஎன்
பயிலாத கைகளினால் பலங்கொண்ட மட்டுமவன்
கழுத்தை நெறுக்கிக் கண்ணிரண்டும் பிதுங்கநன்கு
அழுத்திக் கொலைசெய்து அடுத்தகணம் படியிறங்கி
வீடுவந்து படுத்ததைஎன் விழிமுன்னே காண்கின்றேன்;
கேடுவந்த பின்னர்நான் கிடந்திங்கே புலம்புவதில்
என்னபயன்?" என்றிங்ஙன் பலவாறாய் நடராசன்
அரற்றியபின் அவன்வாழ்வே அர்த்தமின்றித் தோன்றஅவன்
சுரத்தின்றித் துன்பத்தீச் சூழலிலே வெந்துநின்றான்.

முன்னிரவில் தனித்திருந்த மேனகைதன் துயில்நீத்த
பின்னரே கண்டிட்டாள் பிணமாய்க் கிடந்திட்ட
நாயகனின் கோலத்தைநடுக்கமெதும் இல்லாமல்
போய்அவளே 'போலீசுக்(கு)அறிவித்துப் பிறர்தயவில்
ஈமச் சடங்குகளை இயற்றத் தொடங்கித்தன்
சேமத்தை நாடிச் செயலாற்றும் காதலனை
நண்பன் எனும்முறையில் நாட்டார்க்குக் காட்டித்தன்
பண்பில் பழுதவர்கள் பாராமல் செய்துகொண்டாள்.
"நெருஞ்சியின் முள்ளாக நெஞ்சுறுத்தும் நினைப்பையிந்த
அரும்புமல ராய்என்னை அணைப்போள்தான் அறிவாளோ?
நேர்மையுள்ள ஓவியனாய் நேற்றுவரை இருந்தநான்
சீர்கெட்ட கொலைஞனென்ற சேதியிவள் அறிந்துகொண்டால்
காலமெல்லாம் காத்துவந்த காதலுக்குக் கல்லறைதான்!
அடடா!நான் என்செய்வேன் ஆண்டவனே" என்றெல்லாம்
நடராசன் தன்னுள்ளம் நசுங்கிப் புலம்புகையில்

காதலியாய் அவன்நெஞ்சம் தன்பால் கவர்ந்துகொண்ட
சாதனையின் விளைவாகச் சடுதியிலே மேனகையும்
கரையில்லாக் கவலைதன் காதலனைப் படுத்துவதை
விரைவில் புரிந்துகொண்டு வினவினாள்: "என்அன்பே!
புண்ணாக இருந்தஎன் புருஷனின் மரணத்தால்
மண்ணில் நமக்கிருந்த மாபெரும் தடையொன்று
தானாக நீங்கியதால் சந்தோஷம் அடையாமல்
ஏனோநீ பெருந்தனத்தை இழந்ததுபோல் வாட்டமுடன்
தோன்றுகிறாய்என்னிடமே சொல்வதற்குக் கூடாத
வானோர்தம் ரகசியமும் வந்திடுமோ நமக்குள்ளே?"
மேனகையின் கேள்விகளும் மென்சொல்லும் அவளன்பைப்
பூரணமாய்க் காட்டியதைப் புரிந்துகொண்டு தன்நிலைக்குக்
காரணத்தை அவளிடம்தான் கழன்றிடநம் நடராசன்
முடிவெடுத்துத் தன்கதையை முதலிருந்து கடைசிவரை
படிப்படியாய் அவளிடம் பயம்தொடர விவரித்தான்;

தன்செயலின் ஈனமான தன்மையினைக் கேட்டதுமே
மின்சாரம் பாய்ந்தாற்போல் மேனகை திடுக்கிடுவாள்,
மன்றாடி மன்னிப்புக் கேட்டும்மனம் இரங்காது
'என்வாழ்வில் உனக்கினிமேல் இடமில்லைஎனச்சொல்வாள்
என்றெல்லாம் எதிர்பார்த்த ஏழைநட ராசனுக்கு
ஒன்றுமே காதலுக்கு ஒப்பில்லை என்பதுபோல்
பேரழகி மேனகைதன் பெருங்கண்ணில் நீர்தளும்ப,
"ஓராயிரம் கோடி உலகத்து மனிதரிடை
உன்னைப்போல் காதலுக்காய் ஓர்கொலையை யார்புரிவார்?
கண்ணே!என் காதலனே! கவலையெதும் கொளவேண்டாம்
திண்ணமாய் ஒருவருக்கும் தெரியாத விசயமிதை
மண்ணில் புதைத்திடுவோம் வருகின்ற ஞாயிறன்று
நாமிந்த நாகைவிட்டுச் சென்னை நகர்சென்று
சேமமாய் வாழ்ந்திடுவோம் சிரிப்பும் களிப்புடனே"

இவ்வாறு தேற்றியவள் இறுகத் தழுவித்தன்
செவ்விதழை அவன்வாயில் சேர்த்துச் சுவைதந்தாள்.
செய்திட்ட தீவினைக்குத் தகுந்ததோர் தண்டனையைக்
கைதிஎதிர் பார்ப்பதுபோல் காத்திருந்த நடராசன்
'கண்ணே!உன் களங்கமில்லாக் காதலினால் கூறியதை
உண்மையெனக் கொள்ளஎன் உளம்மறுப்ப(து) உணராயோ?

நான்செய்த பாவத்தீ நாளுமென்னை எரிக்கிறது!
ஊன்உறக்க மேதுமின்றி உன்மத்த னாயென்றன்
உள்ளத்தில் அன்றுகண்ட உருவமொன்றே நிற்கிறது!
எள்ளளவும் வேறெதுவும் என்நெஞ்சில் தோன்றாமல்,
காதகனாய் மாறியஎன் கைகளின் பேய்ப்பிடியில்,
வேதனையால் துடித்தஉடல் விழிகள் வெடித்துவிழப்
படுக்கையில் ஒருபாதி பாரில்ஒரு பாதியெனக்
கிடக்கின்ற காட்சிஎனைக் கீறிவதை செய்கிறது;
ஓவியத்தில் மனம்செலுத்த உன்னிநான் அமர்கையிலே
பாவியென்றன் கைஅன்று பார்த்திட்ட காட்சியையே
வரைவதைநான் காண்கின்றேன் வையகத்தில் இனியெனக்கு
அரைநிமிட மேனும்மன அமைதியினிக் கிட்டாது"

இதுகேட்ட மேனகையின் எண்ணத்தில் தோன்றியது
புதுவகை வழியொன்று: "புரிகிறதுஉன் நிலையெனக்கு;
குளவியாய் உனைக்கொட்டும் கோலத்தை யேஉனது
அளவிலாத் திறமையுடன் ஆக்கிவிடு ஓவியமாய்!"
கண்ணிலே நீர்வழிய இதைக்கேட்ட காதலன்தன்
புண்ணுக்கோர் அஞ்சனமாய்ப் புலப்பட்ட(து) அவள்மொழிகள்:
"நீசொன்ன படியேநாம் நேராகச் சென்னைசென்று
வீடொன்று கிடைக்கும்வரை விடுதியிலே தங்கிடுவோம்
எனைவாட்டும் காட்சியினை என்முயற்சி யாவுமிட்டு
வனைவேன்ஓர் ஓவியத்தை வனிதைஉன்றன் வழிப்படிநான்"

சென்னை விடுதியிலே சித்திரம் வரைவதிலே
தன்னை இழந்தோர் தனிஉலகில் சஞ்சரித்தான்.
நேரிலே காணுமொரு நிகழ்ச்சியை வரைவதுபோல்
தூரிகையின் இழைகளிலே தோன்றியது சித்திரமும்.
அவலத்தை உமிழ்கின்ற அக்காட்சி அவன்பட்ட
கவலையெலாம் போக்கிக் கலைஞனின் வெறியூட்டி
உணவுண்டு நன்குஉறங்கி உற்சாகம் கொளச்செய்து
முனமிருந்த சோகத்தை முற்றிலும் விரட்டியது.
சித்திரத்தை முடிப்பதெனச் சிந்தித்த நடராசன்
பத்திரமாய்த் திரைபோர்த்திப் படுக்கையறை தனில்வைக்க
விடுதியுள்ள பணியாளை விளித்திட்டான் துணைசெய்ய;

சடுதியிலே ஓடிவந்த 'சர்வர்'அங்கு வந்தவுடன்
நடராசன் முகம்கண்டு சற்றே நடுங்குவதை
உடனே உணர்ந்தஅவன் 'உன்னைநான் நாகையிலே
பணக்காரர் வீடொன்றில் பார்த்ததுண்டு நிசம்தானே?'
எனவினவப் பணியாள் இன்னும்மிகப் பதட்டமுற்றான்.
கனவிலே நடந்த காட்சியொன்று மெள்ளத்தன்
நனவிற்கு வருதல்போல் நடராசன் உணர்ந்திட்டான்.
மனத்திலே அவன்உடனே வனைந்தான்ஓர் திட்டத்தை:
முன்னிருந்த ஓவியத்தை மூடியஅச் சீலையைஓர்
மின்னல்வே கத்தில்அவன் விலக்கினான்! வெலவெலத்(து)அக்
கோலத்தைக் கண்டவுடன் குலைநடுங்கி நடராசன்
காலில் விழுந்தான்அப் பணியாள்;தன் கைகூப்பி
"ஐயா!நான் அந்த இழிச்செயலை ஆற்றியதை
மெய்யாக வேறெவரும் பார்த்ததில்லை என்றிருந்தேன்;
கொலைசெய்யும் எண்ணமெதும் கொள்ளாதோன் என்வறுமை
நிலைதந்த நினைப்பினிலே நீசனாய் மாறிவிட்டேன்:

பணக்காரர் படுப்பதற்கு முன்அவர்க்குப் பால்கொடுக்கக்
கணக்காக அவர்அறையில் சென்றநான் கண்டதெல்லாம்
தன்னை மறந்தவர்தாம் தூங்குவதைஅவர்அருகில்
'என்னை எடுத்துக்கொள்!எனுமாறு பணக்கற்றை
அழைப்பதுபோல் காணஅதை அள்ளுகின்ற வேளையிலே
கண்விழித்த கனவானின் கழுத்தைஎன் கைகளினால்
வெண்ணையாய்ப் பிசைந்திட்டு வெளியேநான் ஓடிவிட்டேன்;
ஐந்து குழந்தைகளோ(டு) அவதியுறும் ஏழைநான்!
எந்த வகையாலும் எனைக்காக்க வேண்டுமையா!"
என்றந்த ஏழைப் பணியாளன் தான்துடித்துச்
சென்றவனைத் தேற்றிச் சேர்த்தணைத்த நடராசன்
குன்றின்மேல் ஏறிக் கூவுவான் போல்உரைத்தான்:
"அன்றுநான் செயஇருந்த அச்செயலை என்முன்இவனே
சென்று முடித்ததைநான் சேர்ந்தபின் கண்டதன்றோ
உள்மனத்தில் புகைப்படமாய் உருவெடுத்து நானேஅக்
கள்ளக் கொலைசெய்த கயவன்போல் காட்டியது?
கற்பனையில் புதைந்திட்ட காட்சியினால் வெந்திட்ட
அற்பனுக்கு இன்றுமுதல் ஆனந்தம்ஆனந்தம்!"
மேற்கொண்டு நடராசன் விட்டஒலி ஒன்றேனும்
கால்தெறிக்க ஓடினவன் காதிலே விழவில்லை!