Friday, June 30, 2017

கானடா-150

இன்று (1-7-2017) கனடா நாடு தனது நூற்றைம்பதாம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுகிறது:
   
<> ஒன்றரை நூற்றாண்டு <>




காற்றும் நிலமும் யாவருக்கும்
.. கடவுள் தந்த உடைமையெனச்
சாற்றி வாழ்ந்த முன்னோரின்*
.. சரிதம் தன்னை இந்நாளும்
போற்றித் தன்னால் இயன்றவரை
.. போக்கில் லாத மாந்தருக்கும்
ஏற்றம் தந்து வாழவைக்கும்**
.. இந்த நாட்டிற் கிணையேது?

உலகில் மக்கள் துயருறுங்கால்
.. உடனே உதவித் தொகையனுப்பிக்
கலகம் விளையும் இடங்களிலே
.. கடிதே உதவிப் படையனுப்பிப்
பலவாய் மனித நேயத்தின்
.. பாங்கைச் செயலில் காட்டுவதில்
தலைமை தாங்கும் இந்நாட்டின்
.. தகைமை மாணப் பெரிதாமே.

சனநா யகத்தின் நோக்கினின்று
.. சற்றும் பிறழாக் கனடாவில்
மனம்போல் மக்கள் யாவருமே
.. வாழும் அழகே அழகாமே
இனவேற் றுமைக்கிங்(கு) எள்ளளவும்
.. இடமே இல்லை, தலைசாய்த்(து)இத்
தினத்தில் இந்தத் திருநாட்டை
.. தெய்வம் காக்க வேண்டுவமே.

*முன்னோர் – கானடா நாட்டின் பூர்விகக் குடியினாகிய (சிவப்புஇந்தியர்கள்இங்கு அவர்களை Indians என்று குறிப்பார்கள்
.** 2016-ல் மட்டும் கனடா 46,700 வெளிநாட்டு அகதிகளுக்கு இடங்கொடுத்து அவர்கள் நன்கு வாழ வழி வகுத்துள்ளது.

அனந்த்
1-7-2017    

Monday, June 19, 2017

பேறு

<> பேறு <>



செய்பல வேள்வியால்
எய்திடும் சீரெலாம்
மெய்யுணர் வைத்தர லாகிடுமோ?
உய்வதற் கோர்வழி
ஐயனின் முன்னிரு
கைகுவித் தேத்திடல் என்றுணர்வாய்

வாயினால் ”அத்தனும்
தாயும்நீ உன்முனம்
நாயினும் தாழ்ந்தவன் நானெனினும்
சேய்பிழை நீபொறுப்
பாயென வந்துளேன்
நீயலா தார்துணை?” என்றிறைஞ்சிச்

சிற்சபை நாதனின்
பொற்பதந் தூக்கிடும்
அற்புதக் காட்சியில் மெய்ம்மறந்தால்
முற்றிலும் உன்வினை
இற்றிடும் நற்றவர்
பெற்றிடும் பேறுனைச் சார்ந்(து)அதனால்

நானவன் தானெனும்
ஞானமுள் ஓங்கிடும்
மோனமும் கைவரும் காண்பதெல்லாம்
கோனவன் பேருரு
தானெனும் உண்மையாம்
தேனினைத் துய்த்தலும் வாய்த்திடுமே

மேலுல காள்பவர்
பாலுமில் லாதவோர்
சீலமி தைத்தரும் நாதனவன்
மேலவன் கீர்த்தியே
மேலவன் பேரருள்
மேலவற் கேபணி செய்தலுமே !

(ஷட்பதி அந்தாதிப் பஞ்சகம்)
..அனந்த் 14-6-2017

Tuesday, June 13, 2017

வழி காட்டி

<> வழி காட்டி <>
















ஊனார் உடலை
நானென் றெண்ணி
நானா வழியிற் சென்றேனைத்
தானாய் என்றன்
கோன்முன் தோன்றி
வாநீ இங்கென் றழைத்தானே

ஏனோ அவன்சொல்
தேனாய் இனிக்க
நானும் அவன்பால் நாடுங்கால்
தேனார் மொழியாள்
தானோர் பங்கன்
கானை நோக்கி நடந்தாங்கே

எரியில் வெந்து
கரியும் உடல்கள்
நரிகள் பேய்கள் நடுவேதன்
விரிசெஞ் சடையில்
சொரிநீர் தெறிக்க
ஒருகூத் ததனைக் காண்பித்தான்

தன்னை மறந்தென்
முன்னர்க் காணும்
அன்னான் நடத்தில் திளைத்தேனை
இன்னும் உளதென்
பின்னர் வாவென்(று)
என்னை அழைத்துப்  போய்த்தில்லைப்

பதியை அடைந்து
மதிசேர் சடையன்
அதிஅற் புதமாம் மன்றில்தன்
சதிரா டிடுமோர்
பதம்முன் காட்டி
இதுவுன் வழியென் றேமீண்டான்!

(இப்பாடல் கன்னடச் செய்யுள் வகைகளில் ஒன்றான 'ஷட்பதி' என்னும்  ஆறடிச் செய்யுளை ஒட்டி அமைக்கப்பட்டது.)

அனந்த் 13-6-2017

Friday, June 9, 2017

கவியரங்கக் கவிதை: “அந்தி ஓவியம்”

சந்த வசந்தம் கவியரங்கம்-32 அந்தி ஓவியம்”
ஜூன் 2010 

பாடல்கள் பற்றிய பொருள், இலக்கணக் குறிப்புகளை இறுதியில் காணவும்

<>  இறை வணக்கம் <>
ஒருபா லுமைசேர் உருவுடை நாத! உயர்தமிழில்
ஒருபா புலவன் ஒருவற் களித்தன் றுதவிசெய்தாய்
ஒருபா வகையில் ஒருபத் துவந்திங் குரைக்கவந்தேன்
ஒருபா டிலாமல் உருப்பெறச் செய்வதும்ன்கடனே

கடத்தற் கியலாக் கடலாம் தமிழில் கவிதைசொலும்
திடத்தைத் தரயான் தலைவநின் தாளினைச் சேர்வன்கொடும்
விடத்தை மிடறணி வேதிய! அந்திநல் வேளையிலே
நடத்தைப் புரிபவ நாடினன் நின்துணை நானொருங்கே

<> தலைமை வணக்கம் <>
சாரும் அரங்கத் தலைமைப் பணியைத் தனிச்சிறப்போ(டு)
ஏரும் எழிலும் இலங்கும் வகையில் இயக்குவதில்
யாரும் நிகரென ஆகார் இவர்க்கென யாம்களிப்புக்
கூரும் வணம்திறன் கொண்டவர்க் கென்கரம் கூப்புவனே

கரத்தில் தவழும் கணினி வழியே கவின்தமிழ்ப்பூஞ்
சரத்தைத் தொடுத்துத் தருகின்ற ஆற்றல் தனையடையும்
வரத்தை இறையிடம் வாங்கிய சௌந்தர் வடிகவிதைத்
தரத்தைப் புகலத் தமிழக ராதியைச் சாருவனே 

<>  அவை வணக்கம் <>
காற்றுக் இருப்பிடம் காண்வான் வெளிநெற் கதிரினிளம்
நாற்றுக் கிருப்பிடம் நன்னீர் பெருகிடும் நன்செய்நிலம்
சோற்றுக் கிருப்பிடம் சூடு கலம்செந் தமிழ்க்கவிதை
ஊற்றுக் கிருப்பிடம் உள்ளத்தி லூறும் உணர்வுகளே

உணவாய்த் தமிழ்ச்செயு(ள்) உண்டிடும் பாவலர் உங்கள்முனம்
நுணலாய்க் கவிதை நுவல விழைந்து நுழைந்தனன்யான்
குணமே குறித்துக் குறைகள் தவிர்த்திடும் கொள்கையர்நீர்
கணமே படித்துக் களிக்கின் மிதப்பன்மென் காற்றினிலே.

<> அந்தி ஓவியம் <>

செவ்வண்ணப் போ(து)உன்றன் செவ்விகண் டென்மெய் சிலிர்த்துநிற்பேன்
மெய்வண்ணம் பொன்னும் மிளிர்வண்ணம் வைரமும் மேவிநிற்க
எவ்வண்ண மும்கொள் எழிலொடு மாந்தரை ஈர்க்கின்றனை
அவ்வண்ணம் யாவும் அகன்றிடா தென்னுள் அலைந்திடுமே    1

அலையாழி மேனி அழகுகண் டாங்கே அணுகிவந்து
தலைசாய முத்தம் தரும்ஆ தவனின் தகதகப்பால்
குலையாத வண்ணக் குழம்பாய் ஒளிரும் குவலயம்நின்
கலையாத இன்பக் களியாட்டம் தன்னில் கவினுறுமே              2

உறுகாதல் நோயால் உலையும் உளங்கொண்ட ஒண்தொடியார்
பெறுதாப(ம்) மேலும் பெருகிட வைக்குமுன் பெற்றியினைச்
செறுமாறு தோற்றும் செயுளால் சிறப்பிக்கும் தீந்தமிழின்
நறுவாசம் வீசும் நடையோ(டு) அகத்துப்பா நானூறுமே                         3

நூறா யிரமாய் நொடியில் பரவும்உன் நூதனத்தைக்
கூறா தொழிதலும் கூடா தெனினும்நான் கூறுதற்குத்
தேறேன் விழிமுன் தெரியும் விதவிதச் சீர்படைத்த
வேறே தெழிலுமுன் வீச்சுக் கிணையாய் விரிந்திலதே              4

விரிசடை ஈசனார் விண்ணவர் வாழ விடமுண்டபின்
அரியய னோடவ் வமரரும் வேண்ட அதற்கிணங்கி
எரிதழல் ஏந்தி இனியசெம் மேனி எழில்திகழப்
புரிநடம் அந்தியாம் போதெனக் கொண்டாய் புகழுனக்கே      5

புகலும் மறையின் பொருளும் பயனும் முழுதுணரும்
வகையை விளக்கிடும் மந்திரம் தன்னை வரித்திறையின்
தகைமை அறிவோர் தமக்கென வாய்த்த தருணமெனத்
திகழும் பொழுதே! தினமு முனதுரு தெய்விகமே!                       6

உருவம் எடுத்திவ் வுலகில் பிறந்தொரு ஊனமின்றிக்
கருவம் கொழித்திடக் காளை வயதில் களித்தபின்னர்
மருவும் மனையொடு வாழ்ந்தபின் எம்மை வந்தடையும் 
பருவம் நின(து)உடல் பொன்னிறம் போலப் பொலிந்திடுமே    7 

பொலியும் பொழுதாய்ப் புவியோர்க்(கு) உதவி புரிந்(து)அவருள்
நலியும் கவலையை நீக்க நிலவொடு நீதிகழ்வாய்
மலியும் புனலும் பணியும் அணியும் வளர்அழலும்
ஒலியும் பரமன் உடலின் நிறத்தினை ஒப்புவையே                    8

ஒப்பும் உவமையும் ஒவ்வா நினதெழில் ஓவியம்வான்
கப்பும் வகையைக் கவிதையில் எங்ஙனம் கட்டுரைப்பேன்?
அப்பும் அனலும் அருகே நெருங்கி அணைப்பதையார்
செப்பும் திறம்படைத் தோரெனச் சொல்வேன் செகத்தினிலே             9

செகசெக என்னச் சிவந்துள வானிலொர் தீப்பிழம்பு
தகதக என்னச் சொலிக்க நிலவொடு தாரகைகள்
மிகமிகக் கூடி மிளிர முகிலுள் வெடித்துமின்னல்
வகைவகை யாக வரையோ வியமே! வளர்செவ்வியே!              10

*பொருட்குறிப்பு*
இறைவணக்கம்: ஒருபா புலவன் ஒருவற் களித்தன் றுதவிசெய்தாய்: பாணபத்திரருக்கு ஆலவாய் இறைவன் அளித்த திருமுகப் பாசுரம்; தருமிக்கு அளித்த ‘கொங்குதேர் வாழ்க்கை’ பாடல் போன்ற ஒன்று; ஒருங்கே = முழுதும், ஒருசேர


1. செவ்வி = அழகு, புதுமை, காட்சி, பருவம், சமயம்; மெய்வண்ணம் – இடையின எதுகை; அலைதல் = ஆடுதல், திரிதல், அசைதல்
2. கவினுறுதல்  = அழகுபெறுதல்.
3. பெற்றி= குணம் தன்மை; செறுதல் = சினத்தல்; மகளிர் பிரிவுத் துயரை (தாபத்தை) மிகுதியாக்கும் அந்திப் பொழுதைக் கடிவது போலப் புகழும் அகநானூறு செய்யுள்களைக் குறிப்பது.
4. நூதனம் = புதுமை; தேறுதல் = துணிதல், தெளிதல்; வீச்சு = பரப்பு, தாக்கம்
6. வரித்தல் = தேர்ந்துகொள்ளல்
7. பொன்னிறம் = ஆங்கிலத்தில் பயன்படுத்தும் the golden age-ஐக் குறிப்பது
8. பணி = பாம்பு; மலிதல் = பெருகல்; ஒலிதல் = தழைத்தல்
9. கப்புதல் = மூடிக்கொள்ளல், உண்ணுதல்; கட்டுரைத்தல் = உறுதிபடச் சொல்லுதல்; அப்பு=நீர் (கடல்); அனல்=தீ (கதிரவன்).

கட்டளைக் கலித்துறை இலக்கணக் குறிப்பு:
ஒரே எதுகை கொண்ட நான்கு அடிகள்; அடிதோறும் வெண்டளை பயிலும் ஐந்து சீர்கள்; அடி இறுதிச்சீர் விளம்காயாக அமையவேண்டும். செய்யுள் இறுதிச்சீர் ஏகாரத்தில் முடிய வேண்டும். அடிகளுக்கிடையே வெண்டளை தேவையில்லை.  அடிதோறும் முதல், இறுதிச்சீர்களிடையே மோனை அமைய வேண்டும் (1,3,5 சீர் மோனை சிறப்பு). நேரசையில் தொடங்கும் அடி (ஒற்று நீங்கலாக) 16 எழுத்துக் கொண்டதாயும் நிரையசையில் தொடங்கும் அடி 17 எழுத்துக் கொண்டதாயும் உள்ள கட்டளை இருக்க வேண்டும்.  
அடியின் நடுவே உள்ள சீர்களில்: 1) விளங்காய் வருதலாகாது. 2) நெடில் ஈற்றாய் முடியும் ஈரசைச்சீர் வருதல் சிறப்பன்று (இவற்றிற்கு விதிவிலக்குகளை இலக்கியத்தில் காணலாம்) 3) நெடில் நேரசைச்சீரை நடுவேயுடைய மாங்காய்ச் சீர் சிறப்பின்றி அருகிவரும். அப்படி வரும்போது அதைத் தொடர்ந்தோ பின்னரோ அத்தகைய சீர் வரலாகாது.