Tuesday, October 17, 2017

மோன ஒளி

<> மோன ஒளி <>

செயலில் ஒளிநற் சிந்தைஒளி
.. செப்பும் மொழியில் திகழும்ஒளி
அயலார் நலத்தை நாடுமுளத்(து)
.. அன்பின் ஒளிநல் அறிவினொளி
மயலும் மருளும் நீங்கியபின்
.. மனத்தில் மலரும் தெய்வஒளி
முயலும் ஞான நெறிமுடிவில்
.. மோன எனுமொளி இவையருள்வாய்!

அனைவருக்கும் இனிய தீபாவளி நன்னாள் வாழ்த்துகள்!
அனந்த் 18-10-2017

Saturday, October 7, 2017

சிலேடை: அரியும் அரனும் அவன்

                                                          திருச்சிற்றம்பலம்


<> அரியும் அரனும் அவன்  <>

அரியான் அவனை அறியான் பவத்தை
அரியான் அரியான் அறியான்அறைவேன்
அரியான் அலன்றன் அடியார்க்(கு) அவரைப்
பிரியான் பெரியான் அவன்.

சிவன்:
எளிதில் எட்டிட இயலாதவன்; அவனை அறியாதவனது  பவம்  (பிறப்பு-இறப்பு) என்னும் நோயை அழிக்கமாட்டான் (அறிந்தோரின் பவத்தை அழிப்பான் என்பது வெளிப்படை..)  திருமாலும் அறியாதவன் (சிவனின் அடியைக் காண இயலாததைச் சுட்டும்.) அவன் தன் அடியவர்களுக்கு அரியவன் ஆகாத எளியன் என்றும், அவர் தமைப் பிரியாது காக்கும் பெரியோன் என்றும் நான் கூறுவேன்.

திருமால்:
அரி என்ற பெயரைத் தாங்கியவன்அவனை அறியாதவனது  பவம்  (பிறப்பு-இறப்பு) என்னும் நோயை அழிக்கமாட்டான் (அறிந்தோரின் பவத்தை அழிப்பான் என்பது வெளிப்படை..)   (நர)சிங்க உருக்கொண்டவன் அல்லது வானோரிடை சிங்கம் போன்றவன்அவனுடைய பெருமையைக் கேட்டு அறிந்த நான், அவன் தன் அடியவர்களுக்கு அரியவன் ஆகாத எளியன் என்றும், அவர் தமைப் பிரியாது காக்கும் பெரியோன் என்றும் கூறுவேன்.


இந்நாள் மகிமை

<> 7-10-2017 <>
ஏழுபத்தி ரண்டா யிரத்துப் பதினேழைச்
சூழும் தனிப்பெருமை சொல்கின்றேன் – ஆழ்ந்தஅவ்
எண்ணை இருபுறமாய் வாசித்த போதிலும்
கண்ணில் தெரிவதொன்றே காண்!

(*இருபுறமாய் – இடமிருந்து வலமாக அல்லது வலமிருந்து இடமாக; . Thanks to Raji Iyer who pointed out the palindrom.)

:-)
அனந்த் 7-10-2017

Tuesday, October 3, 2017

சிலேடை: ரங்கநாதன் தெருவும் ஆதிசேஷனும்

<> ரங்கநாதன் தெரு - ஆதிசேஷன் சிலேடை வெண்பா <>




     நீண்டு கிடக்கும், நிதமும் இலக்குமியைப்
     பூண்டோன்பேர் தாங்கிப் பணம்பெருக்கும் – வேண்டும்
     பொருள்தரும், நீள்பயணம் போவோர் வழியாய்
      இருக்கும்  தெருஅனந்த னே.

(பணம் = காசு; பாம்பின் படம்.)

ரங்கநாதன் தெரு: நீளமானது; திருமாலின் பெயர் கொண்டது; விற்பனையாளர்க்குத் தினமும் பணத்தைக் கூட்டும்; எந்தப் பொருளும் அங்குக் கிட்டும்; புகைவண்டி நிலையத்திற்கான வழியாக அமையும்.


ஆதிசேடன்: நீண்ட வடிவம், எப்போதும் திருமாலின் பெயரைத் தன் ஆயிரம் நாவில் தாங்கிப் படத்தை விரித்து நிற்கும்தன்னைப் பணிவோர்க்கு வேண்டும் பொருள் ஈயும்.  அடியாரின் இறுதிப் பயணத்திற்கு ஆன நல்வழியாய் அமையும்.