Wednesday, August 24, 2016

கண்ணன் பிறந்தான்

                 

                   <> கண்ணன் பிறந்தான் <>

நறுமணம் நாறும் பூக்கள் நள்ளிர வலர சாந்தம்

உறுமன முடைய  மேலோர் உவகையில் மகிழப் பூமி

சிறுமழை நனைந்து மேனி சிலிர்த்திடச் சிறையி னுள்ளே

குறுநகை தவழமாயன் குழந்தையாய் அவத ரித்தான்

                                    ****

                      <> குழலோசை <>

மலர்பூத்தது வனம்பூத்தது மதிபூத்தது மகிழ்ந்து

நிலம்பூத்தது நதிபூத்தது நிழல்பூத்தது நாட்டில்

தலம்பூத்தது குடிபூத்தது சனம்பூத்தது வானோர்

குலம்பூத்தது கருமாமணி குழலோசையின் ஒலியில்

                                    ****

                        <> கழல் நிழல் <>

மூங்கிலில் இசையைக் கூட்டும் முகில்வணன் குரலைக் கேட்க

ஏங்கிடும் அன்பர் நெஞ்சில் இனியதோர் கானம் ஆவான்

தாங்கிடும் குன்றால் தன்னைச் சார்ந்தவர் துயரம் தீர்த்தோன்

பூங்கழல் நிழலில் நின்றால் பொங்கிடும் இன்பம் வாழ்வில்!

                                    ****

                         <> மாயனின் சீர் <>

பெருவரை ஏந்தும் கையன் பெற்றமுடை ஆயர்
.. பேசுவதை வேட்கும் பையன்

கருமுகில் வண்ண மெய்யன் கஞ்சனுயிர் நீக்கிக்
.. காசினியைக் காத்த துய்யன்

அருமறை ஏத்தும் ஐயன் அன்புடையர் நெஞ்சை
.. ஆசனமாய்க் கொண்ட மெய்யன்

வருதுயர் தீயில் தூசாய் மங்கவைக்கும் இந்த
.. மாயனிவன் சீராம் ஐயே!

                            ****              

.. அனந்த்

24-8-2016

Thursday, August 18, 2016

தமிழர் கண்ட புதுமை

<> தமிழர் கண்ட புதுமை <>


நாமகள் ஈங்கிவர் நாவினில் ராக்-அன்-ரோல்’
.. நர்த்தனம் செய்வதாலே
...... நாடொறும் அகத்திலே, அலுவலில், பள்ளியில்
.......... நடக்கையில், உறங்கிடுங்கால்

மாமியின், டாடியின், அங்கிளின், ஆன்ட்டியின்,
.. மழலையின் வாயில்நித்தம்
...... மருவிடும் ஆங்கில மொழியதன் மேன்மையில்
.......... மனமெலாம் லயித்துநிற்க

ஸ்வாமிஜி நவின்றிடும் ஆங்கில உரையினை
.. ’ஸ்கைப்வழி பார்த்துநிற்பார்
...... சலிப்பது தருவதைத் தவிர்த்திடக் கிடாரைத்
.......... தடவிமைக் ஜாக்சனைப்போல்

பூமியில் கைகளை ஊன்றியே சுழலுவார்
.. புதியதோர் பரதமென்று
..... புதுமையை இங்ஙனம் தமிழர்கள் வாழ்வினில்
....... புகுத்தியே பெருமைகொண்டார்!

அனந்த்

(19-7-2010)