Wednesday, November 30, 2016

வானில் திரியும்....

                                                   <> வானில் திரியும்.... <>

சன்னல் வழியே நோக்கிய போது அழகாகப் பறந்து சென்ற கனேடிய வாத்துகள்
(Canada geese) என்னைக் கணினித் திரைக்குத் துரத்தின. அதன் விளைவு...



     வானில் திரியும் பறவைகாள் - உங்கள்
     வாழ்க்கையை எண்ணி வருந்துகிறேன்!

     தீனியை ஒன்றே தினந்தினமும் - நீர்
     தேடி அலைந்துதிண் டாடுகின்றீர்!

     மானிட ராகிய எங்களைப்போல் - இன்றி
     வீணே கழிக்கிறீர் உம்பொழுதை

     ஏனிந்தத் தீங்கினை ஈசனுமக் -கென்று(ம்)
     இப்புவி தன்னில் இழைத்திட்டான்?

     மானிட ரெங்கள் குழந்தையது -வந்த
     நாள்முதல் நாங்கள் அதனிடத்தில்

     தானினி வாழ்ந்திடத் தேவைபலப் - பல
     தாமுண் டெனமிகத் தாகமுடன்

     வானினும் நீண்டதோர் பட்டியலை -அது
     வாயினாற் பேசுமுன் தந்திடுவோம்

     தேனினும் மேலாங் குரலெடுத்து - அது
     தா,தா தையெனச் சொல்லுமுன்னே

     மேனிலப் பள்ளிக்(கு) அதையனுப்பி -அங்கு
     வேகமாய்க் கல்வி விழுங்கவைப்போம்

     மூனென வெண்மதி காட்டிதினம் - அது
     முற்றிலும் தமிழை மறக்கவைப்போம்

     நானினி யாவரில் மேலெனவே - அதன்
     நெஞ்சினில் எண்ண விதைவிதைப்போம்

     நானில மீதினில் மென்மேலே - பணம்
     நாலெண் விதத்தினில் சேகரிக்கக்

     கூனியுந் தோற்கக் குறுக்குவழி - பல
     கொடுத்தது கூவக் குதுகலிப்போம்

     ஏனினி உம்முடன் வாதாடி - நான்
     என்பொழு திங்ஙனம் வீண்செய்வேன்

     மேனி அழிந்திடு முன்னர்நீர் - எம்     வாழ்முறை பற்றி வளமுறுவீர்


     .. அனந்த் 30-11-2016 (’திண்ணை’ மின்னிதழில் வெளியானது)

Monday, November 28, 2016

என் கணக்கு வாத்தியார்

<> என் கணக்கு வாத்தியார் <>

உருட்டு விழியும் உலர்ந்த சிகையில்
சுருட்டிச் செருகிய துணித்தலைப் பாகையும்
விரட்டு நெடிப்பொடி வீங்கிடு நாசியும்
இருட்டு வேளையில் இடிந்த மதிலுறை
வெருட்டும் அய்யனார் மீசையும் வயிற்றைப்
புரட்டும் பெருங்குரல் ஓசையும் ஒருங்கே
திரட்டிப் படைத்ததோர் திருவுரு கொண்டஅக்
கொரட்டூர்ப் பள்ளியின் கணிதஆ சிரியர்,
அரட்டை அடித்தலும் அருகிலே அமரும்
பரட்டைத் தலையுடை பிறமா ணவரை
மிரட்டி அவரது பண்டம் பறித்தலும்
குருட்டாம் போக்கில் வரும்விடை யெனப்பெருங்
குறட்டை யொலியுடன் துஞ்சலும் கொண்ட
இரட்டைத் தலையோன் எனுமிவ் விருவருள்
முரட்டுத் தனத்தில் முதல்வர்
கொரட்டூர்ப் பள்ளியின் கணிதஆ சானே!

… அனந்த் 27-11-2016 

(2001-ல் ’திண்ணை’ மின்னிதழில் வெளியான பாடலின் இறுதியடிகளைச் சற்றே மாற்றியமைத்த வடிவம்.)

Friday, November 4, 2016

கந்தசஷ்டி: தாமரைத் தாளன்

   <> தாமரைத் தாளன் <>



(சந்தக்குழிப்புதனதனன தனதான னதனன தனதான
                            தனதனன தனதான தனதான")


விடியுமொரு தனிநேர மெழு(ம்)அருண நிறமேவு
...விமலமுக மெனு(ம்)ஆறு கதிர்நாடி

அடியரவர் பலபேரு மணுகியுன துதிபாடி 
...அனுதினமு வரநீயு மவர்காண

கடிபுரவி எனவோடுங் கனகமயி லதன்மேலே
...கையிலமரு(ம்அயிலோடு வருவேளை

வடிவொழுகு பதமான கமலமலர் தனிலேஎன்
...மனமெனுமொ(ர்அறுகாலி படியாதோ?

(வடிவு-அழகு; அறுகாலிவண்டு)

அனந்த் 5-11-2016

இல்லா வாழ்க்கை

முன்குறிப்பு: தானோ பிறரோ தேர்ந்தெடுத்த துணையோடு இல்லற வாழ்க்கை நடத்துவோரின் பெருமையை வள்ளுவர் பெருமான் அறத்துப் பாலில், இல்லறவியல் என்னும் தலைப்பில், இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் (--அதிகாரம் யாருக்கு என்று அன்னார் குறித்திலர்-), அழகுபடப் பத்துக் குறட்பாக்களில் கூறியுள்ளார். அந்தப் பாக்களை ஒட்டி, எமக்குத் தெரிந்த இல்வாழ்க்கைச் சிறப்பை யாம் எடுத்துரைக்க விழைந்தனம். அதன் விளைவாக எழுந்த ்குறட்பாக்களை உங்களோடு பகிர்ந்து மகிழவும் அவாக் கொண்டனம். கீழே காணும் குறட்பாக்கள் வள்ளுவனார் தந்த அதே வரிசையில் (-பத்தாவது பாட்டைத் தவிர-), அவற்றின் சொல்லழகும் சுவையும் குன்றாவண்ணம் அமைக்கப்பட்டவை, (என யாம் நம்புகின்றனம்). ஐயமுறுவோர் திருக்குறளைக் கையிலேந்தி ஒப்பிடுவாராக.


        <>   இல்லா வாழ்க்கை   <> 

இல்வாழ்வான் என்பான் மணம்புரியா நண்பர்கள்
எல்லோர்க்கும் சோறளித்தல் ஏற்பு (1)

துறந்தாரும் தூரத்து உறவான பேரும்
கறந்திடுவார் இல்வாழ்வான் காசு (2)

தன்புலனில் தாரத் துடன்பகைத்த நண்பனுக்கு
உன்புலமே வீடென் றுணர் (3)

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
அழியாமற் காத்தல் அரிது (4)

துன்பும் துயரும் உடைத்தாய இல்வாழ்க்கை
முன்பிருந்த ஜாலிக்(கு) எதிர் (5)

கடனெனக் காண்பதே இல்வாழ்க்கை அஃதை
உடன்தீர்க்க இல்லை வழி (6)

வறுத்தாட்டி இல்வாழ்க்கை வாட்டிடின் வாயில்
புறத்தேபோய்க் கூவென் றழு (7)

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்வோன் களிப்பிற்கு
அயலாகி நிற்கும் அசடு (8)

ஆற்றொழுக்கு நாசிக் குழவிசேர் இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து (9)
(நோன்மை = தவம், பெருமை, பொறுமை, வலி; இங்கு இறுதிப் பொருளில் பயிலும்!)

'கடி'ஜோக்குக் கேற்றதோர் கேலிப் பொருளாய்
அடிபடும்இல் வாழ்வான் தலை (10)

 .. அனந்த் 
(’’ஹப் மாகசீன்’, 2009: )

****** 

Wednesday, November 2, 2016

அவனும் நானும்

        <> அவனும் நானும் <>


சின்னதோர் தலையில் ஈசன்
என்னவோ எழுதி மண்ணில்
இன்னவா றிருப்பாய் என்று
முன்னமே விதித்து விட்டான்

வந்தநாள் முதலாய் இங்குச்
சொந்தமாய் நானே செய்ய
எந்தவோர் உரிமை யின்றி
நொந்துநான் இருக்க வைத்தான்

சிந்தையைத் திருப்ப வைக்கும்
பந்தமாய்ப் பலவே றான
சொந்தமும் அளித்தான் நானும்
அந்தகன் போல வாழ்ந்தேன்
            
இன்றுநான் செய்யும் எதுவும்
நன்றெனில் நன்றி சொல்வேன்
அன்றது தீமை ஆயின்
சென்றவன் பால்சொல் வீரே!

அனந்த் 2-11-2016