முருகன் துணை
<> வேட்கை <>
கைகள் பரந்து கமல மலர்விரி காட்சிதரும்
செய்ய நிறத்துடை சேவடி யோசெந் தாமரையாம்
வெய்ய பகைகொலும் வேலும் சிவந்தே விளங்குமிங்ஙன்
ஐயன் உனையன்(று) அருண கிரியனு பூதியிலே
மெய்யும் உளமும் மெழுகாய் உருகும் விதமுரைத்தும்
உய்யும் வகையை உணரா திருப்பதென் ஊழ்வலியே.
(கையோ அயிலோ கழலோ முழுதும்செய்யோய் சிவசங் கரதே சிகனே - கந்தர் அனுபூதி)
வேட்டுக் குறத்தியை வேட்டித் தருவென வேடமிட்டுச்
சேட்டன் துணையினைத் தேடி அவளுடன் சேர்ந்ததெல்லாம்
நாட்டில் நகைச்சுவை நாடக மானதை நானறிந்தும்
நாட்டம் மனத்தினில் நாட்டித் தினமுமுன் நாமமதைப்
பாட்டில் இசைத்துப் பணிவதன் காரணம் பந்தமில்லா
வீட்டை அடைந்திட வேண்டும் எனும்பெரு வேட்கையொன்றே.
(வேட்டி = விரும்பி; சேட்டன் (வடமொழியில் ஜ்யேஷ்டன்) = தமையன்.)
(பாவினம்: பஃறொடைக் கட்டளைக் கலித்துறை (அல்லது, ஒரு விகற்ப ஆறடித் தரவுக் கொச்சகக் கலிப்பா)
... அனந்த் 13-11-2018