Wednesday, July 19, 2017

நல்லதோர் வழி சொல்வேன்

<> நல்லதோர் வழி சொல்வேன் <>


காலை எழுந்தவுடன் - கணமும்
.. காலந் தவறாமல்
வேலைக்குச் சென்றுவிடு - அங்கேஉன்
.. வீட்டுக் கதைசொதப்பு

கோப்புக்கள் மேசையிலே - மலையாய்க்
.. குவிந்து கிடக்கவிடு
கூப்பிடும் மேலாளாரின் - ஆணையைக்
.. குப்பையில் போட்டுவிடு

வாடிக்கைக் காரரிடம் - வசூலை
.. வாங்கியுன் பையிலிடு
வேடிக்கைக் கேனுமிதை - வெளியில்
.. விட்டு விடாமலிரு

காந்தி படமெதுவும் - கண்ணிலே
.. காணா திருந்துவிடு
சாந்தி பெறுவதற்கு - மேலைச்
.. சரக்கை நாடிவிடு

மூலைக் குடிசையொன்றில் - கிடைத்த
.. மொத்தப் பணத்தினையும்
’ஜாலி மருந்தினுக்கு’ - விலையாய்
.. ஜல்தி கொடுத்துவிடு

பள்ளித் தலத்தினிலே - குழந்தை
.. பாடம் படிப்பதற்கு
அள்ளிப் பணத்தினைநன் - கொடை
.. ஆகக் கொடுத்துவிடு

வியாதி எதுவரினும் - சிகிச்சை
.. வேண்டின் நகரினிலே
கியாதி படைத்த பல- மருத்துவர்
.. கேட்டதை வீசிவிடு

நன்மை அடைவதற்கு - வழியை
.. நான்இங்குக் கூறிவிட்டேன்
உன்னை அதுசுடுமுன் - முந்திநீ
.. உண்மையைச் சுட்டுவிடு!

அனந்த்
12-4-2009 (சந்தவசந்தம் இணையக் குழுவின் கவியரங்கத்தில் இட்டது)

Sunday, July 9, 2017

குரு பூஜை

குரு பௌர்ணமியை அடுத்து வேதவியாஸ பூஜையும் சாதுர்மாஸ்ய விரதமும் கடைப்பிடிக்கப்படும் வேளையை ஒட்டி:

ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने ।
व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः  (मानसोल्लास -30)
ஈச்வரோ குருராத்மேதி மூர்த்தி பேத விபாகினே
வ்யோமவத் வ்யாப்த தேஹாய ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தயே 
(- மானஸோல்லாஸம்)

 திருச்சிற்றம்பலம்


இறையும், குருவும், ‘நான்’என்றுள்
.. இயங்கும் ஆன்மா இவைமூன்றும்   
உருவில் வேறாய்த் தோன்றிடினும்
.. உள்ள ஒன்றின் வெளிப்பாடே
தருவின் அடியில் முனிவர்க்(கு)இத்
.. தத்து வத்தைப் போதிக்கும்
குருவே எங்கும் பரந்துநிற்கும்
.. கோவே! உனக்கு நமஸ்காரம்.

..அனந்த் 9-7-2017