Saturday, July 13, 2019

எங்கும் கணபதி


       எங்கும் கணபதி

நதியரு கேனும் நடுத்தெரு வேனும்
... அதிலொரு கணபதி உண்டு-அவன்
... அழகினை உணும்மன வண்டு              

அதிசய மான ஒலியுடன் ஆனைக்
... கதியுடன் கூடிய சந்தம் - பதம்
... குதிநடம் ஆடர விந்தம்

விதியுடன் விண்ணோர் வழிபடு மேலோன்
... சுதிபுகழ் அதிபல சூரன் - உமை
... மகிழ்வுடன்  அணைசுகு மாரன்


மதியுடன் கொன்றை யணிபர மேசன்
... மகனிவன் மாமதி யாளன்-நெடு
... மலையினும் வலிமிகு தோளன்

ததியுடன் வெண்ணை திருடிடும் மாயன்
...தனக்கிவ  னொருமரு கோனாம் - இவன்
... தனக்கிளை யவன்முரு கோனாம்


எதிர்வரு கின்ற துயர்பல கண்டு
... அதிர்வெதும் அடைந்திட லில்லை-அவன்
... துதிசொலின் விலகிடும் தொல்லை
         

எதிலுளம் சாரு மினியெனக் கேட்பின்
... அதுஅவன் எழிலுரு தானே- அதில்
... அமிழ்ந்தென திடர்களை வேனே


கொதிதரு வாழ்வில் குளிர்தரு போலக்
... கருணையி னுருஅவன் காணீர்-அவன்
... கழலடி சிரமதில் பூணீர்!       


குறிப்பு:
அதிசயமான ஒலி= ஓங்காரம்;
ஆனைக் கதி= யானையின் நடை;
விதி=நான்முகன்;
சுதி=மறை;
ததி=தயிர்   



No comments: