Wednesday, April 24, 2019

அழுக்கு

               <> அழுக்கு <>


உள்ளத்தைத் திண்ணையில் கொண்டுவந்து - சற்றேஉலரவைத்துப் பின்னர் எடுத்துவைத்தேன்வெள்ளை வெளேரென்ற வெய்யிலிலே- அதுவெந்திருக் கும்உள் புகுந்திருந்தகள்ளமெல் லாம்காய்ந்து தீய்ந்திருக்கும்- என்றகளிப்புடன் கையிலெ டுக்கையிலேஎள்ளள வும்முன்பு இருந்தகறை - ஒன்றும்ஏகவில் லைஐயோ என்னசெய்வேன்!

பன்னெடும் நாளாய்ப் படிந்திருந்த - தூசு
பாவியென் நெஞ்சம் அகன்றிடுமோ?
கன்னெஞ்சன் போல்என்றும் காலமெல்லாம் -நானும்

கடத்திய தும்என்றன் குற்றமன்றோ?
வன்முறை வஞ்சம் வளர்த்தபின்னர் -அவை

வாடிடு மோஒரு வார்த்தையிலே? 
என்னென்ன மோசெய்து பார்த்துவிட்டேன் - மாசும்

ஏகவில்லை எங்கும் போகவில்லை


"வந்துநின் றேனுன்றன் வாசலிலே - இந்த
வாழ்க்கையி னைஎனக் கீந்தவனே!
முந்தை வினையென்னை உந்தியதால் - வந்த
மோசமன் றோஎன்றன் மாசுமனம்
சொந்தமென் றாராரோ சொல்லியொரு - துளி
சுகத்தை எனக்கிங் களித்திலரே
எந்தைநீ அன்னைநீ என்னுயிர்நீ -என்றன்
ஏதெலாம் போக்கிடல் நின்கடனே"


என்றுநான் வேண்டிடக் கேட்டஇறை - நகை 
ஏறும் முகத்துடன் சொல்லிடுவான்:

"
ஒன்றும் குறையில்லை உன்னிடத்தில் - அதன்
உண்மைவி ளங்கிட வேண்டுமெனில்
சென்றுநின் உள்ளக் கிடங்கினிலே - நித்தம்
செப்பிடும் 'நான்'என்ப(து) ஆரென்றறி 
என்றும் அழுக்கிலா ஆத்துமம்நீ - என்னும்

எண்ணம் நிறைந்தபின் ஏகும் இருள்!"

..அனந்த்  - திண்ணை மின்னிதழில் 13-10-2002 அன்று இட்டது. 

No comments: