Saturday, December 21, 2019

கவிதை எனக்கு உறவு


கவிதை எனக்கு உறவு

சந்த வசந்தம் கவியரங்கம்-38
தலைவர்
: கவிஞர் சிவசூரி
தலைப்பு
: கவிதை எனக்கு....”

இறைவணக்கம்
கரத்தில் தவழும் யாழொலியால்
... கவிஞர் நெஞ்சில் தமிழமுதம்
சுரக்கச் செய்யும் வாணியுனைத்
... துதித்தேன் கவிதை புனைகின்ற
வரத்தை எனக்கு வழங்குவையே
... வானோர் தங்கள் மணிமுடிசேர்
சிரத்தைத் தாழ்த்திச் சேவிக்கும்
... செல்வீ கல்விப் பெட்டகமே!
  

தலைவர் வாழ்த்து
காரிகை வெண்பா கலிவிருத்தம்
..கவின்மிகு சந்தம் எதுவெனினும
ஓரிரு நொடியில் உள்ளிலிருந்(து)
... ஓடிக் கரம்வழி வந்தெம்மை
மாரியி தெனவே மகிழ்விக்கும்
... வகையாய்க் கவிதை புனையுமெங்கள்
சூரியின் திறனை அனந்தனின்நா
... சொல்ல முயன்று தோற்றிடுமே!

அவையடக்கம்
பாரிமுனம் பார்புகழும்  பாவலர்கள் அமர்ந்திருக்க
ஓரிரண்டு நூல்களையே உணர்ந்திருந்தோன் நுழைந்ததுபோல்
சூரிமுனம் நற்கவிஞர் சூழ்ந்திருக்கும் அவையினில்நான்
நேரில்வரத் துணிந்துவிட்டேன் நேர்பிழைகள் பொறுத்திடுவீர்!

அரங்கக் கவிதை: கவிதை எனக்கு உறவு
(பதினான்கு சீர் ஆசிரிய விருத்தம். அரையடி: கூவிளம் விளம் விளம் விளம் விளம் மா தேமா)

கூட்டினில் புழுவெனக் கூம்பிய மொட்டெனக் கருப்பையில் குழவி யென்னக்
...கூறொணா அதிசயக் கொள்ளையாய்க் குவிந்திடும் குவலயக் காட்சி தன்னில்
நாட்டமொன் றிலாமலென் நாட்களைக் கழித்துநான் நலிந்திடா வண்ணம் என்னை
... நாடிவந் தென்னுளே நானறி யாததோர் நாதமொன் றுள்ள தென்று
காட்டியோர் யாழினைக் கையிலே தந்ததனின் கம்பியை மீட்ட வைத்துக்
... ககனமாம் வெளியிலே களிநடம் செய்திடும் வித்தையைக் கற்றுத் தந்தோர்
ஏட்டிலே பதித்திடும் எழுத்தினில் என்னைநான் யாரெனக் காண வைத்(து)அவ்
... விறைவனை என்னுளே இருத்திய கவிதையிங் கெனக்கெலா உறவு மாமே.

கவிதை....
உணர்வெனும் நற்சோற்றை உள்ளமெனும் தட்டில்
மணமிகு கற்பனைநெய் வார்த்துக் – கணமும்
பிறழாத சந்தம் பிசைந்தூட்டி என்னோ(டு)     
உறவாடும் ஓர்அன்புத் தாய்.

சொற்களைத் தேர்ந்தெடுத்துச் சீரான கட்டிடத்தின்
கற்க ளெனத்தளைக்குள் கட்டிஎன் - விற்பனத்தைக்
காட்டும் வகையினைக் கற்றுக் கொடுத்துஅறிவு
ஊட்டி உயர்த்தும் பிதா. 

எங்கிருந்தோ வந்தென் இதயம் புகுந்ததனுள்
செங்கரும்புச் சாறோடு தேன்கலந்த – பொங்கலெனும்
செந்தமிழைத் தன்னிதழில் தாங்கி எனக்களிக்க
வந்தடைந்த என்றன் மனை.

நெஞ்சமெனும் பஞ்சில் நெருப்புப் பொறியாகி
வஞ்சமின்றி ஓங்கி வளர்ந்தென்னை – விஞ்சி
எரிமலை யாய்ப்பொங்கி ஏட்டில் தவழும் 
வரிகளுள் வாழும் மகள்.

மின்னலெனத் தோன்றி மறைந்திடும் வாழ்க்கையில்
என்னதெனச் செப்பிநான் எக்களிக்கத் – தன்மனத்தில்
என்கருத்தை ஏற்று நிறைவேற்றும் என்தவச் 
சின்னமெனும் செல்வ மகன்.

பொங்கும் கடலலைபோல் பூவிரியும் மெல்லொலிபோல்
சங்கின் நாதம்போல் சதங்கைச் சதிரொலிபோல்   
எண்ணம் எழுப்பும் இசையை எழுத்தாக
வண்ணம் தடவி வடித்திடவும், பண்ணதனில்
தெள்ளு தமிழ்ப்பாலின் தீஞ்சுவையைச் சேர்த்தென்றன்
உள்ளத் துடிப்பை உலகோர்க்(கு) உரைத்தற்கும்
வித்தை எனக்களித்து விண்ணைநீ எட்டென்ற
அத்தன்நிகர் ஆசானும் ஆம்.     

மேலும்...

(பதினான்குசீர் வண்ண விருத்தம்: சந்தம்- தனத்த தனதன தனத்த தனதன தனத்த தனதன தந்தானா)
கனத்த பெரும்இருள் கணத்தில் விலகிட உதித்த கதிரவன் ஒளிபோல
..
கதித்தென் உளமெழு வருத்த(ம்) முழுவதும் விரட்டுந் திறனுள ஒருதோழன்
கொடுத்த செயல்பல அடுத்த நொடியினில் முடித்து நிதமுமென் நலமேதன்
..
குறித்த கடனென நினைத்திவ் வுலகெனை மதிக்கும் வகைசெயும் பணியாளன்
அடுத்த அடியினை எடுக்கு முனமெதிர் இருக்கும் இடர்களை அறிவாலே
...
அகற்று(ம்) முறைகளை  உணர்த்தி முனஞ்செல எனக்குள் உறுதியை அருளீசன்
எனத்தி னமும்வழி நடத்தி வருபல பிறப்பு களிலுமென் உயிர்ஈதே
... எனத்தி கழுமொரு முழுத்து ணைகவிதை எனக்கிங் கெனமொழிந்  தமர்வேனே.

... அனந்த்
11-10-2013

No comments: