Sunday, October 1, 2000

அரசியலார் அம்மானைப் பதிகம்


நாட்டுக் குழைக்குமொரு நல்லெண்ணம் கொண்டிவர்தம்
பாட்டிற்கு நன்றாய்ப் பணம்சேர்ப்பார் அம்மானை
பாட்டிற்கு நன்றாய்ப் பணம்சேர்ப்பார் ஆமாகில்
நாட்டுளர்முன் எங்ஙன் நடமாடும் அம்மானை?
ஓட்டாண்டி யாக உருவெடுப்பார் அம்மானை! (1)

வேளைஒரு கட்சிஎன வெவ்வேறாய் மாறியிவர்
நாளுக் கொருவேடம் நாடுவர்காண் அம்மானை
நாளுக் கொருவேடம் நாடுவரே ஆமாகில்
ஆளை அடையாளம் ஆர்காண்பார் அம்மானை?
ஆளுகின்ற கட்சிஅடை யாளம்காண் அம்மானை! (2)

பேச்சாற்றல் பெற்றுத்தன் தாய்நாட்டுப் பற்றைஇவர்
மூச்சுக்கு மூச்சு முழங்குவர்காண் அம்மானை
மூச்சுக்கு மூச்சு முழங்குவரே ஆமாகில்
ஏச்சிவர்தம் பேச்சில் இருப்பதென் அம்மானை?
ஏச்சிவரை வாழ்விக்கும் மூச்சாகும் அம்மானை!  (3)

அண்டையுள்ள மாநிலத்தில் ஆள்பவரின் ஆட்சிதனைக்
கண்டபடித் தூற்றிவெயில் காய்வார்காண் அம்மானை
கண்டபடித் தூற்றிவெயில் காய்வாரே ஆமாகில்
மண்டையிலே சூடேறி வாடாரோ அம்மானை?
துண்டுபோ டும்கலையில் சூரர்காண் அம்மானை! (4)


கொடும்புயல் தாக்கிக் குடும்பம் இழந்தோர்
படும்துயரம் கண்டு பணம்சேர்ப்பார் அம்மானை
படும்துயரம் கண்டு பணம்சேர்ப்பார் ஆமாகில்
இடும்பை படுவோர்க்கு இரங்குவரோ அம்மானை?

இடும்பையில் செல்வம் இவரேகாண் அம்மானை! (5)

ஆளுமன்றம் தன்னில் அடுக்கடுக்காய் மக்களுக்காய்க்
கேள்வி பலதொடுக்கும் கீர்த்தியர்காண் அம்மானை
கேள்வி பலதொடுக்கும் கீர்த்தியரே ஆமாயின்
கேள்வரிவர் ஆவாரோ கீழ்ப்பட்டோர்க் கம்மானை?

கேள்வியே செல்வமெனும் கொள்கைகொண்டார் அம்மானை! (6)

அடித்தளத்து ஏழைகளின் அன்பரைப்போல் நன்றாக
நடித்(து)அவரை ஏமாற்றும் நாயகர்காண் அம்மானை
நடித்தவரை ஏமாற்றும் நாயகரே ஆமாகில்
அடித்தளத்தார் பிடித்தொருநாள் அடியாரோ அம்மானை?
அடியார் அவர்க்குண்டாம் ஆயிரமாய் அம்மானை!  (7)


அன்பரைப் பேணும் அழகிலிவர் அம்பலத்து
மன்றாடும் மாதேவன் போலாவார் அம்மானை
மன்றாடும் மாதேவன் போலாவார் ஆமாகில்
சென்றங்குத் தாம்ஆடிச் செயிப்பவரோ அம்மானை?
நன்றாகத் தானிவரும் நடித்திடுவார் அம்மானை!  (8)


அடுத்துவரும் தேர்தலிலே ஆட்சிசெய ஏற்றுங்கால்
படிக்கரிசி ஓர்ரூபாய் பாரென்பார் அம்மானை
படிக்கரிசி ஓர்ரூபாய் பாரென்பார் ஆமாகில்
படியின்விலை உயர்ந்திடிலென் பகர்ந்திடுவார் அம்மானை?
படியுங்கால் பகுதியெனப் படியவைப்பார் அம்மானை! (9)

தேர்தலிலே நின்றுஅதனில் தேறாமல் போனபின்பும்
சோர்தலெனும் வார்த்தையைத்தாம் சொல்லார்காண் அம்மானை
சோர்தலெனும் வார்த்தையைத்தாம் சொல்லாரே ஆமாகில்
ஆர்தமைத்தாம் தேடுவரோ ஆறுதலுக்கு அம்மானை?
ஆர்தலையும் வாங்கிமனம் ஆறுவர்காண் அம்மானை!  (10)

குறிப்பு:

பாடல் 5: இடும்பை= துயரம்; 
ஈற்றடியில் இடும்பையில் செல்வம் என்பதை பையில் செல்வம் இடும் எனப் படித்துப் பொருள் கொள்ளவும்.

பாடல் 6:
(*பாரளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்காகக் கேட்கும் கேள்விகளுக்குக் கையூடு வாங்கிய செய்தி முன்பு வெளிவந்தது; செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் என்று கொண்டவர் அல்ல இவர்!)

பாடல் 7: அடியார்= மக்கள் அவரை அடிக்க மாட்டார்கள், ஏனெனில் அந்த அரசியல்வாதிக்கு ஆயிரம் அடியார்கள் உண்டு, அல்லது ஆயிரமாய்ப் பணவசதி உண்டு.


பாடல் 8: நடித்தல் = நடனமாடுதல்; பாவனை செய்தல்.
 
பாடல் 9, அடி 1-2: ஒருபொருள்: 'ஏற்றுங்கால் படிக்கரிசி' - (ஆட்சிசெய்ய ) ஏற்றும் வேளையில் ஒரு படி அரிசி ஒரு ரூபாய்; இன்னொரு பொருள்: ஆட்சிசெய ஏற்றும் (ஏற்றுங்கள்), கால்படி அரிசி ஒரு ரூபாய்.
ஈற்றடி: ‘படியுங்கால் பகுதியெனப் படிய வைப்பார்' - ஒரு பொருள்: நான் சொன்னதில் 'கால் படிக்கு' ஒரு ரூபாய்' என்ற பகுதியை/பொருளைக் கவனியுங்கள், ('நா இன்னா ஒரு படி அரிசியா ஓர் ரூபான்னு சொன்னேன்?)
இன்னொரு பொருள்: என்னுடைய கால்களில் படியுங்கள்/பணியுங்கள் (”நா எப்வோ சொன்னதைப் போய்ப் பெரீசு பண்ணிப் பெனாத்தாமே,  இப்போ பேசாமல் ‘வுளுந்து கும்பிட்டுப் போய்க்கினே இரு!”)

பாடல் 10: ஈற்றடி- ஆர் தலையும் வாங்கி..: தான் தோற்றதற்குக் காரணம் இந்தாளு தான்/(இவுங்க தான்) என்று குற்றம் சாட்டி அவர்களைத் ‘தூக்கிவிடு'வார் (இது பழங்காலத் தூக்கிலிடுவதற்கு இக்கால ஒப்புச் சொல்லாட்சி!
)

தொடர்புள்ள தளங்கள்:
அம்மானை- ஆய்வுக் கட்டுரை  http://vsa-writes.blogspot.in/2012/12/blog-post_4.html 
அம்பலத்தார் அம்மானை Part 1: http://chandhamanantham.blogspot.in/2012/12/blog-post_5210.html

No comments: